மரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா?


கேள்வி: மரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா?

பதில்: மரணத்திற்குப் பின் வாழ்வு உண்டா என்பது உலகில் அனைவரும் கேட்கும் ஒரு கேள்வி. அதை யோபு இவ்வாறு கேட்கிறார், "ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைபோல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்... மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?" (யோபு 14:1 - 2, 14) யோபுவைப்போல நாம் அனைவரும் இந்த கேள்வியின் சவாலைச் சந்திக்கிறோம். உண்மையில் நாம் மரித்தபின் நடப்பது என்ன? நாம் அப்படியே ஒன்றும் இல்லாமல் போய்விடுகிறோமா? அல்லது வாழ்வு என்பது தனிப்பட்ட உன்னத நிலமையை அடையும்வரை நாம் பூமிக்கு வருவதற்கும் திரும்பிப் போவதற்குமான ஒரு சுழலும் கதவா? எல்லாரும் மரித்ததும் ஒரே இடத்திற்குப் போகிறார்களா இல்லை வேறுபட்ட இடங்களுக்குப் போகிறார்களா? உண்மையில் மோட்சம் நரகம் என்னும் இடங்கள் இருக்கிறதா?

வேதம் நமக்கு கூறுகிறதாவது, மரணத்திற்குப்பின் வாழ்வு மட்டுமல்ல, "தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை" (1கொரிந்தியர் 2:9) என்று சொல்லத்தக்கதாக மகிமையான ஒரு நித்திய வாழ்வு இருக்கிறது. நமக்கு இந்த நித்திய வாழ்வை ஈவாக அளிக்க மாம்சத்திலிருந்த தேவனாக இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார். "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." (ஏசாயா 53:5) நாம் அனைவரும் அடையவேண்டிய தண்டனையை இயேசு எடுத்துக்கொண்டு நமது பாவங்களுக்கான பரிகாரமாக தம்முடைய ஜீவனையே கொடுத்தார். மூன்று நாட்களுக்குப்பின், கல்லறையிலிருந்து உயிரோடு எழும்பி தம்மை மரணத்தை வென்றவராக நிரூபித்தார். அவர் மீண்டும் பரலோகத்திற்கு ஏறிச்செல்லும் முன் 40 நாட்கள் பூமியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களால் காணப்பட்டார். ரோமர் 4:25 கூறுகிறதாவது, "அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்."

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டு விவரிக்கப்பட்ட ஒரு நிகழ்வு. அதன் நம்பகத்தன்மையை, கண்ணால் கண்டவர்களிடத்தில் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு பவுல் அப்போஸ்தலன் மக்களிடம் சவாலிட்டார். அதன் உண்மையை ஒருவராலும் மறுக்க இயலவில்லை. கிறிஸ்தவ நம்பிக்கையின் மூலைக்கல் உயிர்த்தெழுதல் ஆகும். கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதால், நாமும் அவ்வாறே எழுப்பப்படுவோம் என்று விசுவாசம் கொள்ள முடியும். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மரணத்திற்குப்பின் உண்டான வாழ்வுக்கு மிகப்பெரிய சான்றாகும். பெரிய அறுவடையாக மீண்டும் மரணத்திலிருந்து எழுப்பப்படப்போகும் அநேகரில் கிறிஸ்து முதலானவர் மட்டுமே. உடல்ரீதியான மரணம் ஆதாம் என்னும் ஒரு மனிதன் மூலமாக வந்தது. நாம் அனைவரும் ஆதாமின் வழித்தோன்றல்களே. இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமாக தேவனுடய குடும்பத்தில் சுவீகாரப்பிள்ளைகளாய் இணைக்கப்பட்ட அனைவருக்கும் புது வாழ்வு அளிக்கப்படும். (1கொரிந்தியர் 15:20 - 22) இயேசுவின் சரீரத்தை தேவன் எழுப்பினதுபோல இயேசுவின் வருகையில் நமது சரீரங்களும் எழுப்பப்படும். (2கொரிந்தியர் 6:14)

நாம் எல்லாரும் மரித்தோரிலிருந்து எழுப்பப்படுவோமென்றாலும், எல்லாரும் பரலோகம் செல்வதில்லை. ஒவ்வொருவரும் இந்த வாழ்க்கையில் ஒரு முடிவை எடுக்கவேண்டியதாய் இருக்கிறது. இந்த முடிவே நித்தியத்தில் நாம் அடையப்போகும் நிலையை நிர்ணயிக்கிறது. ஒரே தரம் மரித்து, பின்பு நியாயத்தீர்ப்படைய நமக்கு நியமிக்கப்பட்டு இருப்பதாக வேதம் கூறுகிறது. (எபிரெயர் 9:27) கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின்மூலம் நீதிமான்களாக்கப்பட்டவர்கள் பரலோகத்தில் நித்திய் வாழ்வடைவார்கள், கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்களோ நரகத்தில் நித்திய தண்டனைக்கு அனுப்பப்படுவார்கள். (மத்தேயு 25:46) பரலோகத்தைப்போல நரகமும் எழுத்துப்படியான ஒரு இடம், வெறும் வாழ்வின் ஒரு நிலை அல்ல. அது துன்மார்க்கர் முடிவில்லாமல் தேவனுடைய நித்திய கோபாக்கினையை அனுபவிக்கும் ஒரு இடம். நரகம் முடிவில்லாத ஒரு பாதாளமாக (லூக்கா8:31, வெளிப்படுத்தல் 9:1) அதில் வசிப்பவர் இரவும் பகலும் என்றென்றும் வேதனைப்படும் கந்தகம் நிறைந்த அக்கினி கடலாக (வெளிப்படுத்தல் 20:10) விவரிக்கப்பட்டுள்ளது. நரகத்தில் அழுகையும் பற்கடிப்பும் மிகுந்த வேதனையையும் கோபத்தையும் குறிக்கும்வண்ணமாக இருக்கும். (மத்தேயு 13:42)

தேவன் தீயவர்களுடைய மரணத்தில் மகிழுபவர் அல்ல, அவர்கள் வாழும்படியாக தீய வழிகளை விட்டு திரும்பும்படியே அவர் விரும்புகிறார் (எசேக்கியேல் 33:11) ஆனால் அவர் நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை. நாம் அவரைத் தள்ளிவிடுவோமானால், நித்தியமாக அவரை விட்டு விலகி வாழும் நமது முடிவை அவர் ஏற்றுக்கொள்கிறார். பூமியில் நம்முடைய வாழ்க்கை ஒரு தேர்வு, இனி வரப்போவதற்கான ஒரு ஆயத்தம். விசுவாசிப்பவர்களுக்கு மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையானது தேவனோடு பரலோகத்தில் வாழும் வாழ்க்கை ஆகும். விசுவாசியாதவர்களுக்கு மரணத்திற்குப் பின்னான வாழ்க்கை அக்கினி கடலில் கழிக்கும் நித்தியமாகும். நாம் மரணத்திற்குப்பின் நித்திய வாழ்வைப் பெற்று அக்கினிக் கடலை எப்படித் தவிர்க்கலாம்? இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசம் மற்றும் நம்பிக்கை - என்னும் ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்..." என்று இயேசு கூறினார், (யோவான் 11:25 - 26)

நித்திய வாழ்வான இலவச ஈவு எல்லாருக்கும் கிடைக்கூடிய ஒன்றாகும். "குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்" (யோவான் 3:36) மரணத்திற்குப்பிறகு தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு நமக்கு அளிக்கப்படுவதில்லை. நமது நித்திய வாழ்வின் நிலையானது இயேசு கிறிஸ்துவை ஏற்பது அல்லது தள்ளிவிடுவதின்மூலம் இவ்வுலக வாழ்வுக் காலத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. "இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." (2கொரிந்தியர் 6:2) இயேசு கிறிஸ்துவின் மரணத்தை தேவனுக்கு விரோதமான நமது பாவங்களுக்கான முழுப் பரிகாரமாக நாம் நம்புவோமானால், இவ்வுலகில் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை மட்டுமல்ல, மரணத்திற்குப்பின் கிறிஸ்துவின் மகிமையான பிரசன்னத்தில் நித்தியமான வாழ்க்கை நமக்கு உறுதியளிக்கப்படுகிறாது.

Source: www.gotquestions.org 

Comments